Thursday, December 22, 2011

அக்டோபர் 2004 இல் 'எந்திரன்' பற்றி சுஜாதா!


அக்டோபர் 2004 இல் ஆனந்த விகடன் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் ஷங்கரின் 'ரோபோ' ப்ராஜக்ட் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது தற்செயலாகப் படிக்கக் கிடைத்தது (நன்றி: http://sujatha-kape.blogspot.com). படித்து விட்டு அவர் மறைந்த பின் 2010 இல் வெளி வந்த 'எந்திரன்' படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்!

>>>>>ஷங்கருடன் ‘ரோபோ’ என்று ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அதில் வரும் ரோபாட் இன்றைய தினங்களில் சாத்தியம் இல்லை. கதைக்காக அதற்கு அதிக சாதனை களும், புத்திசாலித் தனமும், மனித உணர்வு களும் தந்தோம். ரோபாட் இயலில் இன்றைய நிலை என்ன என்பதைச் சொல்லி விடுகிறேன். இன்றைய ரோபாட் ஓர் அறைக்குள் நுழைந்து வெளிவரும். தான் எங்கே இருக்கிறோம் என்பதை இரு பரிமாண வரைபடம் செய்து தெரிந்துகொள்ளும். இதற்கே அது ஆயிரக்கணக்கில் செய்தித் துணுக்குகளை உள்ளே பெற்றுக் கொள்ள வேண்டும் குழப்பம் ஏற்பட்டால், ஒரு மூலையில் போய் நின்றுவிடும். இல்லையேல், அடுத்த ஃப்ளாட்டில் திரிந்து, அங்கேயுள்ளவர் களை அலறவைக்கும்.

2010-ம் ஆண்டுக்குள் நீங்கள் இதைவிடச் சற்று புத்திசாலியான வீட்டு ரோபாவை எதிர்பார்க்கலாம். அது தன்னைச் சுற்றியுள்ள உலகை முப்பரிமாணத்தில் பார்க்கும் திறமை பெற்று, இன்றைய ரோபாட்டைவிட ஆயிரம் மடங்கு அதிக தகவல்கள் சேகரித்து அலசும்.

எதிர்கால ரோபாட்டுகளின் சில முன்மாதிரிகள் இன்றே ஆராய்ச்சி சாலைகளில் கிடைக்கின்றன. வாக்குவம் க்ளீனர் பார்த்திருப்பீர்கள். ஆளுதவி இல்லாமல் தானே வீட்டைத் துப்புரவாக தூசுறிஞ்சி சுத்தமாக்கும் வாக்குவம் க்ளீனர்கள் இன்று சாத்தியம். அவற்றால் மாடிப்படி எது, சுவர் எது என்பதைக் கண்டுகொள்ளமுடியும். போகப்போக தன்னிடமுள்ள வரைபடத்தைப் புதுப்பித்துக்கொண்டு, விவரம் சேர்த்துக்கொள்ளும். சுவரில் போய் தானாகவே சார்ஜ் வாங்கிக் கொள்ளும்.

முதல் தலைமுறை முழு ரோபாட்டுகள் மனித வடிவில் இருக்கும். கை கால்கள் வைத்துக்கொண்டு நடக்கும். பல காரியங்கள் செய்யும். ஆனால், உங்களுக்கு நண்பனாக இருக்காது. அதன் மூளையை ஒரு பல்லியின் மூளைக்குச் சமமாகச் சொல்லலாம். சுமார் நூறு ஆணைகள் தெரிந்திருக்கும். ஃபாக்டரியில் வடிவமைத்ததைத் தவிர, புதிய காரியம் எதையும் அதனால் செய்யமுடியாது. புரியவில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு, ஓர் ஓரத்தில் போய் நின்றுகொள்ளும். அதைத் திட்டினால் தெரியாது. திட்டலாம்.

2030-க்குள் இரண்டாம் தலை முறை ரோபாட்டுகள் வந்துவிடும். பல்லியின் மூளையிலிருந்து எலியின் மூளைக்கு உயரும். உதாரணமாக, ஒரு பொருளைக் கையில் எடுக்குமுன், அதன் எடைக்கேற்ப ஒரு கை, இரண்டு கை... ஏன், மூன்று கைகளைக்கூடப் பயன்படுத்தும். போகப்போகக் கற்றுக்கொள்ளும் விதமாக‘ கண்டிஷனிங் மாட்யுல்ஸ்’ என்னும் நிரலின்படி நல்ல காரியங்கள், வேண்டாத காரியங்கள் என்றுவிருப்ப அளவை வைத்துக் கற்றுக் கொள்ளும். அதற்கு எஜமானனின் குரல் பரிச்சயம் உண்டு. அவர் சொல்லும் good, bad போன்ற வார்த்தைகளுக்கேற்ப ஒரு செயலைத் தொடரவோ, நிறுத்தவோ செய்யும். நீங்கள் தூங்கும் சமயத்தில் சப்தமெழுப்பாமலிருக்க அதற்குக் கற்றுக் கொடுக்கலாம்..

மூன்றாம் தலைமுறை ரோபாட், ஒரு குரங்கின் திறமையைக் கொண்டிருக்கும். நாம் செய்வதைப் பார்த்து அதுவும் செய்யும். 'மங்கி ஸீ மங்கி டூ!' உங்கள் வீட்டை முழுமையாக அறிந்திருக்கும். வெளியுலகைப்பற்றி அதற்குத் தெரியாது.

நான்காம் தலைமுறை ரோபாட்டுகள்தான் மனிதனுக்கு அருகே வரும். உதாரணமாக,ஒரு இங்க் பாட்டிலைக் கவிழ்த்தால், இங்க் கொட்டி தரை பாழாகிவிடும் என்பதை அறிந்திருக்கும். அதேபோல் பல எளிய திறமைகளை ஒத்திகை பார்த்துவிட்டுக் கற்றுக்கொள்ளும். இந்த நிலைமை வர 2040 வரை ஆகலாம்.

ரோபாட்டுகள் உங்கள் மகளைக் காதலிக்க, இன்னும் அரை நூற்றாண்டாவது ஆகும்.<<<<<<

சினிமா விரும்பி

Tuesday, December 6, 2011

இந்த வார அலப்பரை 4- 'கொல வெறியைப் பற்றி நாலு வரி!'

இந்த வார அலப்பரை 4- 'கொல வெறியைப் பற்றி நாலு வரி!'

நேற்று இரவு வரை யூ டியூபில் 'ஒய் திஸ் கொல வெறி டி?' பாடல் பதினாறு மில்லியன் ஹிட்ஸ் பெற்றிருக்கிறது ( still counting!). அதன் தயாரிப்பாளர்களே கூட பதினைந்து மில்லியன் எங்கள் லட்சியம் என்றுதான் சொன்னார்கள்! இதனிடையே ஒரு பெண் குரல் வெர்ஷனும் ஒரு (அழகான ) தமிழ் வெர்ஷனும் யூ டியூபில் வெளி வந்து விட்டன. இந்தக் 'கொல வெற்றி' எப்படி சாத்தியமாயிற்று? என் கணிப்பு கீழே:

1. ரஜினி, மற்றும் கமலின் அடுத்த தலைமுறையினர் கை கோர்த்திருப்பதால் நிச்சயம் ஏதோ பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கேட்க (பார்க்க) வருபவர்கள் அதிகம். (எழுத்தாளர் ஞாநியும் ஏறக்குறைய இதே கருத்தை எழுதியிருந்தார், அவர் 'டச்'சுடன்!)
2. அப்படியொரு foot tapping rhythm! லேசான folk கலந்த மெலோடி மற்றும் 'நையாண்டி மேளம் ' போல ஒரு ஸ்டைல்!
3. இளைஞர்களுக்கு என்றுமே சலிக்காத 'காதல் தோல்வி' யால் 'தண்ணி'யடிக்கும் concept!
4. ஆங்கிலம் & தமிழ் கலந்த 'Tanglish' format தமிழ் இளைஞர்களை உடனே சென்றடைந்து விட்டது, 'ஐயோ பத்திக்கிச்சு' என்று! அதே போல் தெற்கே மற்ற மாநிலங்களிலும், வட இந்தியாவிலும் இது ஒரு ஜாலியான ஆங்கிலப் பாடலாகவே பார்க்கப் படுகிறது. தில்லியில் இப்போது கல்யாண சீசன்; ஊர்வலங்களில் எல்லாம் இந்தப் பாட்டைப் போட்டுப் பட்டையைக் கிளப்புகிறார்கள்! (தமிழ் வார்த்தைகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்பதையும் கவனியுங்கள்)
5. தனுஷ் குரல் மட்டுமில்லாமல், அவர் காட்டும் முக பாவங்கள், மற்றும் ஸ்ருதி ஹாசன் காட்டும் ஓரிரு முக பாவங்கள், கண்ணசைவுகள் எல்லாமே இளைஞர்களைக் கவர்கின்றன. 'மாமா, நோட்ஸ் எடுத்துக்கோ; அப்படியே கைல ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ!, சரியா வாசி!' போன்ற பொருளற்ற வாக்கியங்கள் கூட ரசிக்கும்படியாகவே இருக்கின்றன.
6.எல்லாவற்றுக்கும் மேலாக Diego Maradona, 1986 இல் சொன்னது போல் ' Hand of God' ஏதோ இருக்கும் போல!

சினிமா விரும்பி

Saturday, November 12, 2011

இந்த வார அலப்பரை 3! (நோக்கு வர்மம்)

இந்த வார அலப்பரை 3! (நோக்கு வர்மம்)

நான் இது வரை 'ஏழாம் அறிவு ' பார்க்கவில்லை. அந்தப் படத்தில் 'ஹிப்னாடிஸம்' என்பது 'நோக்கு வர்மம்' எனப்படும் பழந்தமிழர் கலை என்று காட்டியிருப்பதாகப் படித்தேன். எனக்கென்னவோ ஆதிகாலத்தில் தமிழ் பிராமணர்கள்தான் இந்த நோக்கு வர்மத்தைக் கண்டு பிடித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது! ஏனென்றால் அவர்கள்தான் வீட்டில் 'நோக்கு, நேக்கு' என்று பேசிக் கொண்டிருப்பார்கள்! இது எப்படி இருக்கு?

சினிமா விரும்பி

Monday, November 7, 2011

'ரா ஒன்' (ஹிந்தி) திரை விமர்சனம்


ஒரு நல்ல திறமை வாய்ந்த இயக்குனர் ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் காட்டுகிறது. தமிழ் ' எந்திரனோடு ' ஒப்பிட்டே தீர வேண்டும். அங்கு மூன்று ரஜினி (விஞ்ஞானி வசீகரன், நல்ல சிட்டி, வில்லன் சிட்டி Ver 2.0) கேரக்டர்களும் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தார்கள். துவக்கத்தில் சிட்டி செய்யும் காமெடிகளும் பார்த்துப் பார்த்து செய்யப் பட்டிருந்தன. இங்கே அப்படி அல்ல. ஆரம்பக் காட்சிகளில் சேகர் சுப்ரமணியம் ஷாருக் கான் (சேகர் என்ற பெயர் ஷாருக் கானுக்கு மிகவும் பிடிக்கும் போல! நினைவிருக்கிறதா அந்த காலத்து தூர்தர்ஷனில் 'சர்க்கஸ்' சீரியலில் சேகரன் என்ற பெயரில் முதலாளியின் மகனாக வந்தது அவரேதான்!) ஏதோ 'மிஸ்டர் பீன்' போலத் தடுக்கி விழும் காமெடி நிறைய செய்கிறார் . பின்னணியில் ' பைத்தியக்காரா! பைத்தியக்காரா! பைத்தியக்காரா!' என்ற காமெடி மியூசிக் ஒலிக்கிறது. நூடில்ஸில் தயிரைக் கலந்து கையால் ஒரு வெட்டு வெட்டுகிறார். நான்கு ஆண்டுகள் முன்பு வெளி வந்த 'ஓம் ஷாந்தி ஓம்' இல் ஷாருக் ஒரு காட்சியில் தமிழ்ப் பட நடிகராக 'என்னடா ராஸ்கலா' என்று 'அய்யய்யோ ஜீ' தமிழ் பேசியிருப்பார். அதே போல் இங்கும் ஒன்றிரண்டு 'அய்யய்யோ ஜீ' தமிழ் வசனம் பேச முயற்சிக்கிறார். அங்கே பரவாயில்லை; இந்தப் படத்தில் ஒரு முழு தமிழ் கேரக்டருக்குத் தேவையான 'ஹோம் வொர்க்' செய்யவே இல்லை. என்னத்தைச் சொல்ல? மறைந்த காமெடி நடிகர் மெஹ்மூத், தான் ஆரம்பித்து வைத்த மதராஸி காமெடிகளின் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீராத நியூசன்சை உண்டாக்கி விட்டுப் போய் விட்டார்.

(Disclaimer: Spoilers ahead!) ஆனால் இவர் நல்ல திறமை வாய்ந்த வீடியோ கேம் டிசைனராம், 'கடைசியில் நன்மையே வெல்லும்' என்ற கொள்கையில் நம்பிக்கை உள்ளவராம்! விடியோ கேம் அடிமையான தன் மகன் வில்லன்களை வழிபடுகிறான் ( 'Villains are kickass!') என்பதற்காக அவனுக்காகவே ஹீரோவை விட வில்லன் பலம் வாய்ந்தவனாக அமைத்து ஒரு அட்டகாசமான விடியோ கேம் தயாரிக்கிறார். அவருடைய கேரக்டரைப் பற்றி ஒரு சரியான உருவம் நம் மனதில் பதியும் முன்னரே அவர் கொல்லப் படுகிறார்; கிட்டத்தட்ட இடைவேளை வந்து விடுகிறது. அந்த சமயத்தில் விடியோ கேமில் இருந்து உயிருடன் வெளி வந்த வில்லன் ரா. ஒன்னை (Random Access One அல்லது ராவண்) அழிப்பதற்காக சேகரின் மகன் பிரதீக் இரண்டாவது ஷாருக் கானை (Good One , ஜீ-ஒன் அல்லது ஜீவன் ) கேமிலிருந்து உயிர்ப்பிக்கிறான். இந்தச் சின்னப் பையனையும் (மும்பையில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அர்மான் வர்மா) அவன் ஹேர் ஸ்டைலையும் பார்த்தால் சிறுவன் அல்ல சிறுமி போல் இருக்கிறது! ரா. ஒன் தான் விரும்பும் வடிவம் எடுக்கக் கூடியவன் என்பதால் இடைவேளைக்கு முன் ஒரு சைனீஸ்- அமெரிக்கன் நடிகரும் (டாம் வு) முடிவில் அர்ஜுன் ராம்பாலும் அந்த கேரக்டரைச் செய்திருக்கிறார்கள். அர்ஜுன் ராம்பால் கொஞ்ச நேரமே வந்தாலும் தத்ரூபமான வில்லன்; இவர் உதிர்க்கும் ஒரு 'நச்' வசனம்: 'வருஷா வருஷம் 'ராம்லீலா' கொண்டாடி ஏண்டா ராவணனை எரிக்கறீங்க? அவன் எப்போதும் சாவதில்லை என்றுதானே?' டாம் வு பார்வையில் உக்கிரம் கொப்பளிக்கிறது; அவ்வப்போது 'ஆளவந்தான் ' கமல் போல் கழுத்தை நொடிக்கிறார் .

இடைவேளையின் போது ரொம்ப நேரம் 'பாப் கார்ன்' வாங்கப் போனால் ரஜினி வரும் காட்சியை மிஸ் பண்ண வேண்டியதுதான்! சொல்லப் போனால் வலியத் திணிக்கப் பட்ட இந்தக் காட்சி ஒட்டவே இல்லை என்பது ஒரு புறம் இருக்க ரஜினி ரொம்ப வயதானவராகவும் களைப்பாகவும் தெரிகிறார். அவருடைய தீவிர ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றம்தான்! ரஜினி சார், 'ராணா' வோ 'கோச்சடையானோ' எப்போ ரிலீஸ்?

இடைவேளைக்குப் பிறகு படம் திடீரென்று சூடு பிடிக்கிறது! பொதுவாக கதை மும்பையிலிருந்து லண்டனுக்கு நகரும். இங்கு கதை லண்டனிலிருந்து மும்பைக்கு நகர, உடனே அசுர வேக 'சேஸ்' காட்சிகளுடன் ஒரு non- stop roller coaster ride தான்! இந்தப் பகுதியில் (ஏன் மொத்தப் படத்திலுமே!) முக்கியமானவை இரண்டு விஷயங்கள்தான்; செனிகலீஸ்- அமெரிக்கன் பாடகர் அகான் பாடியிருக்கும் 'சம்மக் சல்லோ ' பாடல் 'refreshingly different'. படத்தில் பார்ப்பதற்கும் ஒரு விஷுவல் ட்ரீட்! இவருடன் தமிழ் மற்றும் இந்தியில் சில வரிகளைப் பாடியிருப்பவர் ஹம்சிகா ஐயர். ரசிக்கக் கூடிய தமிழ் வரிகள் (எழுதியவர் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்) :

'என்னைத் தொட்டு என்னுள்ளத்தை நொறுக்க மாட்டியோ?
என்னைப் போலப் பெண்ணைப் பார்த்து மயங்க மாட்டியோ?
கண்ணில் கண்ணைப் பூட்டி விட்டால் சிரிக்க மாட்டியோ?
என்னில் உன்னைச் சூட்டி விட்டால் ஒட்டிக்க மாட்டியோ?'

இந்தக் காட்சியில் சிவப்பு டிரெஸ்சில் கரீனா கபூர் மிகவும் குளுமை! (ஒரு கொசுறு தகவல் - பல படங்களுக்குப் பிறகு இப்போதுதான் சேலையில் தோன்றுகிறாராம். சைஸ் ஸீரோவை எல்லாம் மூட்டை கட்டியாச்சாம்மா Bebo?!) மற்ற நேரங்களில் சுமாராக நடிக்கவும் செய்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை; கணவன் இறந்த பின் இவரது மகன் பிரதீக் ஜீவன் ஷாருக்கை நண்பனாக முழுமையாக ஏற்றுக் கொண்டு விட, இவர் ஜீவனை ஏற்கிறாரா இல்லையா என்ற குழப்பம் கரீனாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் இருக்கிறது, ஏன், இயக்குனருக்கே படம் முடியும் வரை இருக்கிறது!

அடுத்தது க்ளைமாக்ஸ்! 'எந்திரனை'ப் போலவே எடுக்கப் பட்ட எலெக்ட்ரிக் ட்ரெயின் காட்சியில் 'எந்திரனை' விட சூடு பறக்கிறது! கடைசியில் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் தூள் தூளாக இடிந்து விழும் காட்சியில் கிராபிக்ஸ் அசாத்திய மிரட்டல்! ஆனால் இவற்றைத் தவிர செலவழித்த கோடிகளுக்கு ஏற்ற கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இல்லை. 'எந்திரனில்' பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டிருந்த அழகான சின்னச் சின்ன கிராபிக்ஸ் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஒரு காட்சியில் ஜீவன் ஷாருக்கின் மூக்கிலிருந்து ஏதோ நீல நிற வயர் வெளி வர, கரீனா அதைப் பார்த்து அதிர்ச்சி அடைய , ஷாருக் பொறுமையாக முழு வயரையும் எடுத்து வெளியே எறிகிறார். டைரக்டர் சார், எங்க ஊர் வடிவேலு சொல்வது போல் 'சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு?'

பட ஆரம்பத்தில் வரும் 'கல்நாயக்' சஞ்சய் தத் , 'தேசி கேர்ள்' பிரியங்கா சோப்ரா விடியோ கேம் காட்சியைக் குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் ரசிக்கிறார்கள்.(ஹிஹி , நானும்தான்!) ஹிந்தியில் மிக விரசமான அர்த்தம் தரும் ' இஸ்கீ லீ', உஸ்கீ லீ ' ,'சப்கீ லீ' என்ற பெயர்களை மூன்று சைனீஸ் விடியோ கேம் பெண்களுக்கு வைத்திருக்கிறார்கள்; இவர்கள் மூவரும் ப்ரூஸ் லீயின் சகோதரிகளாம்! 'கொஞ்சம் கொஞ்சம்' என்பதை 'காண்டோம் காண்டோம் ' என்று அபத்தமாகக் காமெடி செய்ய முயன்றிருக்கிறார்கள்! பத்து நிமிடமே திரையில் வந்தாலும் டாக்சி டிரைவர் சுரேஷ் மேனனின் காமெடி அதகளம்!

படத்தில் இடையிடையே ஷாருக் கானின் குழந்தை ரசிகர்களுக்காக அட்வைஸ், 'வீட்டில் இந்த ஸ்டண்டை எல்லாம் முயற்சிக்காதீர்கள்' என்று! நடுவே ஒரு காட்சியில் சிகரெட் பிடிப்பதற்கு எதிராகவும் ஒரு அட்வைஸ்! எப்படி? ஷாருக் கான் சிறுவனிடம் கேட்கிறார் ' ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கானோர் சிகரெட் பிடிப்பதை விட்டு ஒழிக்கிறார்கள்; எப்படி தெரியுமா?' பையன்- 'எப்படி? பேக்கட்டின் மேல் உள்ள எச்சரிக்கையைப் படித்து விட்டா? ' ஷாருக்-'இல்லை! தாங்களே செத்துப் போவதன் மூலம்!'

படம் பார்க்க வேண்டுமென்றால் '3D' இல் பாருங்கள்; 'எந்திரன்' என்று ஒரு படம் வரவேயில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்! அப்போதுதான் கொஞ்சமாவது ரசிக்கலாம்!

மொத்தத்தில் இயக்குனர் அனுபவ் சின்ஹா- 'அனுபவம் பத்தாத சின்ஹா! '

சினிமா விரும்பி

Tuesday, September 27, 2011

வாழ்க நீ எம்மான்!


சாமர்த்தியமாக, மிக சாமர்த்தியமாக ஒரு பெரிய கூட்டமே மகாத்மா காந்தியைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது வாய் கூசாமல் இழிவு செய்யவோ காத்திருக்கிறது! இன்று எனக்கு ஒரு SMS வந்தது ' எல்லோரும் காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறார்கள் ; ஆனால் பகத் சிங்கின் பிறந்த நாளை யாருமே நினைவு கூரவில்லையே! '. இது போல் எழுதுபவர்களுக்கு அப்படியொன்றும் பகத் சிங்கின் மேல் பரம அபிமானம் ஏதும் இல்லை! சந்தடி சாக்கில் காந்தியை நாலு சாத்து சாத்த முடியாதா என்று பார்க்கும் புண்ணியவான்கள்தான் இவர்கள்!

கொஞ்ச நாள் முன்னால் 'மீ நாதுராம் போல்தோய்' (நான் நாதுராம் பேசுகிறேன்) என்றொரு மராத்தி நாடகம் வந்தது. இந்த நாடகத்தில் ஏதோ ராவண வதம், சூரபத்மன் வதம் போல் 'காந்தி வதம்' என்ற சொல்லை அடிக்கடி உபயோகப் படுத்துவார்களாம்! பிறகு 'காந்தி மை பாதர்' என்று ஒரு ஹிந்திப் படம். சொல்லப் போனால் 'ஹே ராமில்' கூட இடையிடையே காந்தியை சன்னமாகக் கிண்டலடிப்பார்கள். முதல் இரவின் போது கமல் 'சத்திய சோதனை' படிக்கும் வசுந்தரா தாஸ் இடம் சொல்வார் ' எனக்குப் பாதிப் புனைகதைகளில் நம்பிக்கையில்லை!'. (I don't believe in semi fiction!) 'சத்திய சோதனை' இவர்களுக்குப் பாதிப் புனைவாம்!

இதைத் தவிர சில அறிவு ஜீவிகள் அவ்வப்போது ' இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பிரிட்டிஷ்காரனே இந்தியாவை விட்டுப் போய் விடுவதாகத்தான் இருந்தான்' என்பார்கள், ஏதோ இவர்கள் போய் அவன் மனதைத் தோண்டிப் பார்த்தாற்போல! 35 ஆண்டுகளுக்குப் பிறகு 1982 இல் பாக்லாந்து போர் நடக்கும் போது இவர்கள் டீ குடிக்கப் போயிருந்தார்களோ என்னவோ!

காலம் காலமாக அவரை மகாத்மா என்றோ காந்தி அடிகள் என்றோ காந்திஜி என்றோ அண்ணல் என்றோ அழைக்காமல், வேண்டுமென்றே காந்தியார் என்று அழைப்போரும் உண்டு! (ஒரு சுவாரஸ்யமான தகவல் - அமரர் திரு.வி.க.தான் சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் போல் காந்தி அடிகள் என்ற பிரயோகத்தை உண்டாக்கினார்!). "அவரை தேசப் பிதா என்று சொல்வது தவறு, அது ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கிய மரபு. அவர் இந்தியத் தாயின் தலைமகன்" என்று வாய் வக்கணை காட்டுவோரையும் பார்த்திருப்பீர்கள்!

ரொம்பவே நடுநிலையாய் காந்தியை விமர்சிக்கிறார்களாம் ! மகாத்மா காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை சுகமாக அனுபவித்துக் கொண்டே அவரைத் தூற்றும் பிறவிகளை ' Time Machine' இல் பின்னோக்கிப் போய் 1947 க்கு முந்தைய அடிமை இந்தியாவில் கொண்டு போய் வீசி விட்டு நாம் மட்டும் திரும்பி வந்து விட வேண்டும் !

'நேற்று இன்று நாளை'யில் கவிஞர் வாலி எழுதியது போல் ' இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்!'

சினிமா விரும்பி

Sunday, August 7, 2011

இந்த வார அலப்பரை 2! நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !

நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !


சமீபத்தில் இருபத்தாறாவது முறையாக நாமும் 26/11/2008 அன்று மும்பையில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக அசைக்க முடியாத ஆதாரங்களை அவர்களிடமே கொடுத்திருக்கிறோம். இது வரை கொடுத்ததை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு 'ஆதாரம் பத்தாது, இன்னும் கொஞ்சம் கொடுங்கய்யா!' என்று அவர்களும் வழக்கம் போல் நம்மைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்! நாமும் இன்னும் கொஞ்சம் ஆதாரம் கிடைக்காதா என்று அரக்கப் பறக்கத் தேடிக் கொண்டிருக்கிறோம்! 'வின்னர்' படத்தில் வடிவேலு சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது!

'நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !'

சினிமா விரும்பி

Thursday, June 30, 2011

இந்த வார அலப்பரை 1!

இந்த வார அலப்பரை 1:

(ஒவ்வொரு வாரமும் வரும் என்று கம்பெனி கியாரண்டி கொடுக்காது!)

1 போட்டாரய்யா MOU!

தொழிலதிபர்கள் பெரிய பெரிய தொழிற்சாலை ஆரம்பிக்க அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டுப் பார்த்ததுண்டு . ஹிந்தி நடிகர் ஓம் புரி தன் மனைவியிடம் 2008 இல் 'உடனடியாகப் பிரிய முடியாததால் இரண்டு ஆண்டுகளில் பிரிவோம், விவாகரத்து பெற்றுக் கொள்வோம்' என்று MOU போட்டிருக்கிறாராம்! அதனால் 'நான் இப்போ என்ன செய்தாலும் நீ கேட்க முடியாது' என்று வேறு பிட்டைப் போடுகிறாராம் ! வர வர எதுக்குத்தான் MOU போடுவதென்று ஒரு விவஸ்தையே இல்லாமப் போச்சுப்பா! புரிந்துணர்வே இல்லாததற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமா?!

2 ஒரு பிரபல வார இதழில் கவர் ஸ்டோரி :

"ரஜினி திரும்ப வருகிறார்! 'ராணா'வை மீண்டும் துவக்குகிறார்! வடிவேலுவை மன்னிக்கிறார்!"
' ஏம்பா வடிவேலுவை மன்னிப்பது என்றே வைத்துக் கொண்டாலும் அதைச் செய்ய வேண்டியவர் வேறு ஒருவராச்சே?! திரும்பத் திரும்ப மன்னித்துக் கொண்டே இருந்தால் சுலபமாக எல்லோரும் இவரிடம் வாலாட்டுவார்களே?!

3 திடீரென்று பரவி விட்ட ஒரு பேஷன்!

முதலில் சில மெட்ரோக்களில் மட்டுமே தலைகாட்டி இப்போது இந்தியா முழுவதும் பரவி விட்ட ஒரு கொடுமையான பேஷன்! அலுவலகம் செல்லும் பெண்கள், சேலையோ, பேன்ட் ஷர்ட்டோ, சுடிதாரோ, சல்வார் கமீஸோ எது அணிந்திருந்தாலும், கூடவே எக்ஸ்ட்ராவாக ஒரு துப்பட்டாவை எடுத்துக் கொண்டு முகம் முழுக்கப் பேய் மாதிரி போர்த்திக் கொண்டு, இரண்டு கண் மட்டும் தெரியும்படி டூவீலரில் போவது, அதுவும் பெரும்பாலும் Goggles போட்டுக் கண்ணையும் மறைப்பது! கேட்டால் ஹிந்தியில் சொல்வது போல் 'தூல், தூப்' (தூசி, வெயில்)பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்களாம்! பார்த்துப் போங்கம்மா! தீவிரவாதின்னு போலீஸ் புடிக்கப் போறாங்க!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...