Tuesday, September 27, 2011

வாழ்க நீ எம்மான்!


சாமர்த்தியமாக, மிக சாமர்த்தியமாக ஒரு பெரிய கூட்டமே மகாத்மா காந்தியைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது வாய் கூசாமல் இழிவு செய்யவோ காத்திருக்கிறது! இன்று எனக்கு ஒரு SMS வந்தது ' எல்லோரும் காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறார்கள் ; ஆனால் பகத் சிங்கின் பிறந்த நாளை யாருமே நினைவு கூரவில்லையே! '. இது போல் எழுதுபவர்களுக்கு அப்படியொன்றும் பகத் சிங்கின் மேல் பரம அபிமானம் ஏதும் இல்லை! சந்தடி சாக்கில் காந்தியை நாலு சாத்து சாத்த முடியாதா என்று பார்க்கும் புண்ணியவான்கள்தான் இவர்கள்!

கொஞ்ச நாள் முன்னால் 'மீ நாதுராம் போல்தோய்' (நான் நாதுராம் பேசுகிறேன்) என்றொரு மராத்தி நாடகம் வந்தது. இந்த நாடகத்தில் ஏதோ ராவண வதம், சூரபத்மன் வதம் போல் 'காந்தி வதம்' என்ற சொல்லை அடிக்கடி உபயோகப் படுத்துவார்களாம்! பிறகு 'காந்தி மை பாதர்' என்று ஒரு ஹிந்திப் படம். சொல்லப் போனால் 'ஹே ராமில்' கூட இடையிடையே காந்தியை சன்னமாகக் கிண்டலடிப்பார்கள். முதல் இரவின் போது கமல் 'சத்திய சோதனை' படிக்கும் வசுந்தரா தாஸ் இடம் சொல்வார் ' எனக்குப் பாதிப் புனைகதைகளில் நம்பிக்கையில்லை!'. (I don't believe in semi fiction!) 'சத்திய சோதனை' இவர்களுக்குப் பாதிப் புனைவாம்!

இதைத் தவிர சில அறிவு ஜீவிகள் அவ்வப்போது ' இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பிரிட்டிஷ்காரனே இந்தியாவை விட்டுப் போய் விடுவதாகத்தான் இருந்தான்' என்பார்கள், ஏதோ இவர்கள் போய் அவன் மனதைத் தோண்டிப் பார்த்தாற்போல! 35 ஆண்டுகளுக்குப் பிறகு 1982 இல் பாக்லாந்து போர் நடக்கும் போது இவர்கள் டீ குடிக்கப் போயிருந்தார்களோ என்னவோ!

காலம் காலமாக அவரை மகாத்மா என்றோ காந்தி அடிகள் என்றோ காந்திஜி என்றோ அண்ணல் என்றோ அழைக்காமல், வேண்டுமென்றே காந்தியார் என்று அழைப்போரும் உண்டு! (ஒரு சுவாரஸ்யமான தகவல் - அமரர் திரு.வி.க.தான் சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் போல் காந்தி அடிகள் என்ற பிரயோகத்தை உண்டாக்கினார்!). "அவரை தேசப் பிதா என்று சொல்வது தவறு, அது ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கிய மரபு. அவர் இந்தியத் தாயின் தலைமகன்" என்று வாய் வக்கணை காட்டுவோரையும் பார்த்திருப்பீர்கள்!

ரொம்பவே நடுநிலையாய் காந்தியை விமர்சிக்கிறார்களாம் ! மகாத்மா காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை சுகமாக அனுபவித்துக் கொண்டே அவரைத் தூற்றும் பிறவிகளை ' Time Machine' இல் பின்னோக்கிப் போய் 1947 க்கு முந்தைய அடிமை இந்தியாவில் கொண்டு போய் வீசி விட்டு நாம் மட்டும் திரும்பி வந்து விட வேண்டும் !

'நேற்று இன்று நாளை'யில் கவிஞர் வாலி எழுதியது போல் ' இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்!'

சினிமா விரும்பி

Sunday, August 7, 2011

இந்த வார அலப்பரை 2! நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !

நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !


சமீபத்தில் இருபத்தாறாவது முறையாக நாமும் 26/11/2008 அன்று மும்பையில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக அசைக்க முடியாத ஆதாரங்களை அவர்களிடமே கொடுத்திருக்கிறோம். இது வரை கொடுத்ததை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு 'ஆதாரம் பத்தாது, இன்னும் கொஞ்சம் கொடுங்கய்யா!' என்று அவர்களும் வழக்கம் போல் நம்மைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்! நாமும் இன்னும் கொஞ்சம் ஆதாரம் கிடைக்காதா என்று அரக்கப் பறக்கத் தேடிக் கொண்டிருக்கிறோம்! 'வின்னர்' படத்தில் வடிவேலு சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது!

'நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !'

சினிமா விரும்பி

Thursday, June 30, 2011

இந்த வார அலப்பரை 1!

இந்த வார அலப்பரை 1:

(ஒவ்வொரு வாரமும் வரும் என்று கம்பெனி கியாரண்டி கொடுக்காது!)

1 போட்டாரய்யா MOU!

தொழிலதிபர்கள் பெரிய பெரிய தொழிற்சாலை ஆரம்பிக்க அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டுப் பார்த்ததுண்டு . ஹிந்தி நடிகர் ஓம் புரி தன் மனைவியிடம் 2008 இல் 'உடனடியாகப் பிரிய முடியாததால் இரண்டு ஆண்டுகளில் பிரிவோம், விவாகரத்து பெற்றுக் கொள்வோம்' என்று MOU போட்டிருக்கிறாராம்! அதனால் 'நான் இப்போ என்ன செய்தாலும் நீ கேட்க முடியாது' என்று வேறு பிட்டைப் போடுகிறாராம் ! வர வர எதுக்குத்தான் MOU போடுவதென்று ஒரு விவஸ்தையே இல்லாமப் போச்சுப்பா! புரிந்துணர்வே இல்லாததற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமா?!

2 ஒரு பிரபல வார இதழில் கவர் ஸ்டோரி :

"ரஜினி திரும்ப வருகிறார்! 'ராணா'வை மீண்டும் துவக்குகிறார்! வடிவேலுவை மன்னிக்கிறார்!"
' ஏம்பா வடிவேலுவை மன்னிப்பது என்றே வைத்துக் கொண்டாலும் அதைச் செய்ய வேண்டியவர் வேறு ஒருவராச்சே?! திரும்பத் திரும்ப மன்னித்துக் கொண்டே இருந்தால் சுலபமாக எல்லோரும் இவரிடம் வாலாட்டுவார்களே?!

3 திடீரென்று பரவி விட்ட ஒரு பேஷன்!

முதலில் சில மெட்ரோக்களில் மட்டுமே தலைகாட்டி இப்போது இந்தியா முழுவதும் பரவி விட்ட ஒரு கொடுமையான பேஷன்! அலுவலகம் செல்லும் பெண்கள், சேலையோ, பேன்ட் ஷர்ட்டோ, சுடிதாரோ, சல்வார் கமீஸோ எது அணிந்திருந்தாலும், கூடவே எக்ஸ்ட்ராவாக ஒரு துப்பட்டாவை எடுத்துக் கொண்டு முகம் முழுக்கப் பேய் மாதிரி போர்த்திக் கொண்டு, இரண்டு கண் மட்டும் தெரியும்படி டூவீலரில் போவது, அதுவும் பெரும்பாலும் Goggles போட்டுக் கண்ணையும் மறைப்பது! கேட்டால் ஹிந்தியில் சொல்வது போல் 'தூல், தூப்' (தூசி, வெயில்)பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்களாம்! பார்த்துப் போங்கம்மா! தீவிரவாதின்னு போலீஸ் புடிக்கப் போறாங்க!

சினிமா விரும்பி

Wednesday, December 8, 2010

வோடபோன் மற்றும் ஏர்டெல்

தெரிந்து செய்தார்களோ, தெரியாமல் செய்தார்களோ தெரியவில்லை. பார்த்தவர்களும் இன்று வரை இதைக் கூர்ந்து நோக்கியதாகத் தெரியவில்லை. சமீபத்தில் வெளியிடப் பட்ட ஏர்டெல்லின் புதிய லோகோவும் ஏற்கனவே பிரபலமான வோடபோனின் ரத்தச் சிவப்பு லோகோவும் அச்சு அசலாக ஒன்றாக இருப்பதைப் பாருங்கள்!


சினிமா விரும்பி



Monday, October 11, 2010

இந்திய நாணயத்துக்கு ஒரு சின்னம்



பொதுவாழ்வில் நாணயத்துக்கு ஒரு சின்னமாகப் பெருந்தலைவர் காமராஜ், அமரர் கக்கன் போன்றோரைச் சொல்வார்கள். இப்போது இந்திய நாணயத்துக்கே ஒரு சின்னம் வந்து விட்டது. கிட்டத்தட்ட 120 கோடி மக்கள் தொகை, தேசத்தின் உற்பத்தி 1.25 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள், ஒரு ட்ரில்லியனுக்கு மேல் GDP உள்ள பன்னிரண்டு நாடுகளில் ஒன்று; (பன்னிரண்டாவதுதான், இருந்தாலும் பரவாயில்லை, நூற்றுப் பன்னிரண்டு இல்லையே !) இன்றைய தேதியில் உலகின் அதிவேக வளர்ச்சி கொண்ட நாடுகளில் ஒன்று எனப் பல பெருமைகள் இருக்கும் போது நம் நாணயத்துக்கென்று ஒரு சின்னம் இருப்பது முறைதானே?

இதை உருவாக்கியவர் D. உதயகுமார் என்ற ஒரு தமிழர் என்பதிலும் நமக்குப் பெருமைதான். வெறும் ஹிந்தி 'ர' வில் மேலே இரண்டு கோடுதானே போட்டார், இது என்ன பெரிய விஷயமா? மறைமுகமாக அல்ல, கிட்டத்தட்ட நேரிடையாகவே ஹிந்தியைத் திணிக்கிறார்களே (கேட்டால் அது ஹிந்தி அல்ல, தேவநாகரி என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள்!) என்றெல்லாம் விமர்சனங்கள் உள்ளன. இவற்றில் ஓரளவு நியாயமும் உள்ளது. இருப்பினும், தேசத்துக்கென்று ஒரு மூவர்ணக் கொடியைப் போல், ஒரு ' ஜன கண மன ' வைப் போல், ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியைப் போல் இதுவும் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றுதான். புழக்கத்தில் உள்ள கரன்சி நோட்டுக்களின் எண்ணிக்கையில் நாம்தான் உலகில் முதலிடம் என்று நினைக்கிறேன். (தவறாக இருந்தால் திருத்தவும்) . அந்த நோட்டுக்களில் இந்தச் சின்னம் அச்சிடப்படாது என்பது சற்றே ஏமாற்றமளிக்கிறது! (இந்தக் கட்டுரை எழுதிப் பல மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 2011 இல் ' ' சின்னம் பதித்த இரண்டு ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வந்து விட்டன!) இது இல்லாமலே கூடக் கண்டிப்பாக இந்தச் சின்னம் உலக அளவில் விரைவில் பிரபலமாகியே தீரும். அமெரிக்கா (டாலர்), இங்கிலாந்து ( U.K பவுண்டு ) , ஜப்பான் (யென்) , ஐரோப்பிய யூனியன் (யூரோ) இவற்றுக்கு இணையாக நம் ரூபாய்க்கும் ஒரு சின்னம் வந்து விட்டது. மேலும் Rupee, ருப்பையா என்றெல்லாம் அழைக்கப்படும் நேபாளம், பாகிஸ்தான் , இலங்கை மற்றும் இந்தோனேசிய நாட்டுக் கரன்சிகளில் இருந்து நமக்கு ஒரு தனிப்பட்ட அடையாளம் இருக்கப் போகிறது. ஒரே ஒரு சிறு குறை! டாலருக்கு $ என்றும் சென்டுக்கு c இன் மேல் இரண்டு கோடு என்றும் வழங்குவது போல் நம்முடைய நயா பைசாவுக்கு ஒரு சின்னம் இல்லாமல் விட்டு விட்டார்கள்! பின்னாளில் உருவாக்குவார்களோ என்னவோ!

வரவேற்கிறோம்! வாழ்க !

சினிமா விரும்பி

Wednesday, October 6, 2010

'எந்திரன்' திரை விமர்சனம்



வலை உலகில் பலரும் முதல் இரண்டு நாட்களிலேயே விமர்சனம் எழுதித் தள்ளி விட்டார்கள். நானும் படம் பார்த்து விட்டு வந்து பதிவு எழுதாமல் விட்டால் ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவன் போல் என்னைப் பார்ப்பார்கள் என்பதால் இந்தப் பதிவு!

ரோபோ (அது ரோபோ அல்ல ரோபோட் என்று எனக்கு லயோலாக் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் சொல்லித் தந்தது வேறு விஷயம்!) பற்றிய படம் என்றதும் 'என்னடா, கான்செப்ட் ரொம்பப் பழசாகிப் போச்சே, எங்கே ஸ்கூல் பசங்க டிராமா போடுவது போல் கையையும் காலையும் 'விசுக் விசுக்'கென்று ஆட்டிக் கொண்டு நடந்து சொதப்பி விடுவார்களோ' என்று பயந்தேன். நல்ல வேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை! ரோபோவின் நடை,உடை ,பாவனை,பேச்சு மிகவும் அருமையாக வந்திருக்கிறது. படம் பார்க்கும் முன் நான் மொத்தம் இரண்டு ரஜினி (ஒன்று விஞ்ஞானி வசீகரன் , மற்றொன்று சிட்டி ரோபோ ) என்றுதான் நினைத்திருந்தேன் .பிறகுதான் தெரிந்தது , மூன்றாவதாக ஒரு வில்லன் ரோபோ ( சிட்டி வெர்ஷன் 2.0)வும் உண்டு என்று . ஒரிஜினல் சிட்டி cute என்றால் சிட்டி 2.0 deadly! அடேங்கப்பா ! என்னா வில்லத்தனம் ?! வாயைக் கோணிக்கொண்டு 'ரோபோ' என்று அவர் (அது?) சொல்லும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது. சண்டைக் காட்சிகளில் இப்படி ஒரு அனல் பறப்பதைத் தமிழ் சினிமா இது வரை கண்டதில்லை.Yuen Woo Ping க்கும் பீட்டர் ஹெயினுக்கும் கொடுங்கப்பா ஆளுக்கு ஒரு பாட்டில் ஒயின்!

வசீகரனின் காதலி சனாவாக ஐஸ்வர்யா ராய் . மெதுவா, மிக மெதுவா, வயதாகிக் கொண்டிருக்கும் ஒரு பேரிளம்பெண்! சந்தானம் மற்றும் கருணாஸின் காமெடி எடுபடவில்லை என்றால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? சிட்டி செய்யும் குறும்புகளே போதும் என்று இயக்குனர் விட்டு விட்டார் போல. ஆனால் உதவாக்கரை எடுபிடிகளாக இருக்கும் அவர்களிருவரும் திடீரென்று விஞ்ஞானி ரஜினிக்கு துரோகம் செய்வதை ஏற்க முடியவில்லை.

பச்சைமுத்து கேரக்டரில் பத்தே நிமிடம் வரும் கலாபவன் மணி தமிழர்களை மிகவும் இழிவு படுத்தும் வசனம் ஒன்றைப் பேசுகிறார். கண்டிப்பாகக் கண்டிக்கப்பட வேண்டிய இந்த வசனத்தைப் பற்றி இதுவரையில் யாரும் பெரிதாகக் கண்டனம் எழுப்பியதாகத் தெரியவில்லை

இடைவேளைக்குப் பின் இரண்டு மூன்று முறை ரோபோவும் சனாவும் டூயட் பாடுகிறார்கள். சற்றே அலுப்புத் தட்டுகிறது. விஞ்ஞானி வசீகரன் பாடும் பெருவில் படமாக்கப் பட்ட 'கிளிமாஞ்சாரோ' பாடல் ஒரு விஷுவல் ட்ரீட். தாளம் போடவும் வைக்கிறது.இந்தப் பாடலில் பா. விஜயின் வரிகள் சற்றே offbeat! அதே போல் இன்னொரு பாட்டு அந்த ரஜினியையே பாட வைத்திருக்கலாம். பாடல்களில் 'கிளிமாஞ்சாரோ'வுக்கு அடுத்ததாக 'அரிமா அரிமா'வைச் சொல்லலாம். மற்றதெல்லாம் OK ரகம்.


இயக்குனர் ஷங்கருக்கு ட்ராபிக் போலீசைக் கண்டால் என்ன கோபமோ தெரியவில்லை!
'இந்தியன்' முதல் ஒவ்வொரு படத்திலும் அவர்களைக் கலாய்க்கிறார். எந்திரனில் கான்ஸ்டபிளாக வருவது மறைந்த கொச்சி ஹனீபா. கொஞ்ச நேரமே வந்தாலும் ரகளை!

என்னதான் ரோபோடிக்ஸ் பற்றிய படம் என்றாலும் நாம் பார்ப்பது முழுக்க முழுக்கப் பொழுது போக்குக்காக ஒரு தமிழ்ப்படம், அதுவும் ரஜினி படம் என்பதை சில இடங்களில் மறந்து விட்டார்கள். வழக்கமாக ரஜினிக்குக் கொடுக்கும் grand entry இல்லாதது, விவேக்கோ அல்லது வடிவேலுவோ செய்யும் காமெடி ரகளை இல்லாதது, ரஜினி கலாபவனுடன் சண்டை போடாமல் தலை தெறிக்க ஓடுவது போன்றவற்றை ஏற்கவே முடியவில்லை. பட வசனங்களில் ஆங்கில நெடி அதிகம். சனாவிடம் சிட்டி ரஜினி சொல்கிறார் " நான் 72 language இல் lullaby பாடித் தூங்க வைப்பேன்". இதையே 'நான் 72 மொழிகளில் தாலாட்டுப் பாடுவேன் ' என்று சொல்ல முடியாதா ?

ரோபோவின் திறமைகளைக் காட்டச் சின்னச் சின்னதாகப் பல காட்சிகளைச் செதுக்கியிருப்பதை ரசிக்க முடிகிறது. சிட்டி ரோபோ அசுர வேகத்தில் பல பெண்களுக்குக் கையில் மெஹந்தி வரைந்து விடுவது, மிகப் பெரிய ஒரு ப்ரைம் நம்பரைத் திரையில் எழுதிக் காட்டி விட்டு 'இதை சரி பார்க்க விஞ்ஞானிகளுக்கு ஏழு வருஷம் ஆகும்' என்பது, சதுரமாக ஆம்லெட் போடுவது, நிச்சயதார்த்தத்தின் போது சளைக்காமல் jugglery செய்வது, கெட்ட ரோபோ குண்டடி பட்ட தன் இடது கண்ணிலிருந்து குண்டை எடுத்தெறிந்து விட்டுத் தானே கண்ணை ரிப்பேர் செய்து மீண்டும் மாட்டிக் கொள்வது மற்றும் பல. ஹிந்தி 'Three Idiots ' பாணியில் ரோபோ பிரசவம் பார்க்கும் காட்சி ஒன்று உள்ளது. ஒரிஜினலைப் பார்த்தவர்களுக்கு இதில் சுவாரஸ்யம் கம்மிதான். ஒரு காட்சியில் MBBS படிக்கும் ஐஸ்வர்யா சிட்டியின் உதவியுடன் பரீட்சையில் ஹைடெக்காக பிட் அடிக்கிறார் என்பதும் நெருடுகிறது.

இடைவேளைக்குப் பின் நாம் எதிர்பார்க்கும் முன்பே க்ளைமாக்ஸ் தொடங்கி விடுகிறது.ரொம்ப நீளமான க்ளைமாக்ஸ் என்றாலும் ஒரு நொடி கூடத் தொய்வு இல்லை. Nail biting finish!! தமிழில் இது வரை வந்த பிரம்மாண்டங்களை எல்லாம் 'ஜுஜுபி'ஆக்கி விடுகிறது இந்த அண்ட பிரம்மாண்டம்! ஏற்கனவே பலரும் எழுதியது போல் ரத்னவேலு கேமரா, ஆண்டனி கோன்சால்விஸ் படத்தொகுப்பு சாபு சிரிலின் கலை எல்லாமே கன கச்சிதம். போயும் போயும் மும்பையின் பழைய டேனி டென்சோங்பாவை விட்டால் வேறு புது வில்லனே இவர்களுக்குக் கிடைக்கவில்லையா?! கடைசியில் திரையில் 15 நிமிடம் கிரெடிட்ஸ் ஓடும் போது ' அடேங்கப்பா! கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறையில் இத்தனை தமிழர்களா ! 'என்ற பிரமிப்பு ஏற்படுகிறது.

படம் முழுக்க மறைந்த எழுத்தாளர் சுஜாதா விரவிக் கிடக்கிறார் என்றால் அது மிகையில்லை . 'ஐயோ! இப்படி ஒரு கெட்ட ரோபோட்டின் கையில் உலகம் சிக்கி விடக் கூடாதே!' என்று நாம் மனம் பதைக்கும் போதே படம் முழு வெற்றி அடைந்து விடுகிறது! பாலிவுட் பாஷையில் சொல்வதென்றால் 'பைசா வசூல்!'

எந்திரன்- 2010 இன் எம்.ஜி.ராமச்சந்திரன்

சினிமா விரும்பி

Tuesday, September 7, 2010

'கவிக்கோ அப்துல் ரஹ்மான்'

முன்பொரு முறை குமுதத்தில் படித்தது:

கவிக்கோ அப்துல் ரஹ்மான் திரைப் படப் பாடல் எழுதுவதில் என்றுமே ஆர்வம் காட்டியதில்லை. நண்பர் ஒருவர் ' உங்கள் பாடல் சிதைக்கப் படாது' என்று உறுதியளித்து இரண்டு பாடல்கள் அவரை வலுக் கட்டாயமாக எழுத வைத்தார் . முதல் பாடல் ' என்னடி கோபமா? உன் பக்தனுக்கு நீ தருவதென்ன சாபமா? 'என்று துவங்கியது. மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போன திரை உலகில் இது முற்றிலும் புரட்சிகரமானது. சவுண்ட் என்ஜினீயர் உடனே சொன்னார் ' என்ன சார்? முதல் பாட்டிலேயே சாபம், கீபம் என்றெல்லாம் வருது!' கவிஞர் பட்டென்று பதிலளித்தார் ' அப்படியானால் இரண்டாவது பாட்டை முதலில் ரெகார்ட் பண்ணுங்க' . விசித்திரத்திலும் விசித்திரம், அந்தப் படம் கடைசியில் வெளி வரவே இல்லை! இப்போது சொல்லுங்கள் இது மூட நம்பிக்கையா இல்லையா?

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...