Thursday, December 22, 2011

அக்டோபர் 2004 இல் 'எந்திரன்' பற்றி சுஜாதா!


அக்டோபர் 2004 இல் ஆனந்த விகடன் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் ஷங்கரின் 'ரோபோ' ப்ராஜக்ட் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது தற்செயலாகப் படிக்கக் கிடைத்தது (நன்றி: http://sujatha-kape.blogspot.com). படித்து விட்டு அவர் மறைந்த பின் 2010 இல் வெளி வந்த 'எந்திரன்' படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்!

>>>>>ஷங்கருடன் ‘ரோபோ’ என்று ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அதில் வரும் ரோபாட் இன்றைய தினங்களில் சாத்தியம் இல்லை. கதைக்காக அதற்கு அதிக சாதனை களும், புத்திசாலித் தனமும், மனித உணர்வு களும் தந்தோம். ரோபாட் இயலில் இன்றைய நிலை என்ன என்பதைச் சொல்லி விடுகிறேன். இன்றைய ரோபாட் ஓர் அறைக்குள் நுழைந்து வெளிவரும். தான் எங்கே இருக்கிறோம் என்பதை இரு பரிமாண வரைபடம் செய்து தெரிந்துகொள்ளும். இதற்கே அது ஆயிரக்கணக்கில் செய்தித் துணுக்குகளை உள்ளே பெற்றுக் கொள்ள வேண்டும் குழப்பம் ஏற்பட்டால், ஒரு மூலையில் போய் நின்றுவிடும். இல்லையேல், அடுத்த ஃப்ளாட்டில் திரிந்து, அங்கேயுள்ளவர் களை அலறவைக்கும்.

2010-ம் ஆண்டுக்குள் நீங்கள் இதைவிடச் சற்று புத்திசாலியான வீட்டு ரோபாவை எதிர்பார்க்கலாம். அது தன்னைச் சுற்றியுள்ள உலகை முப்பரிமாணத்தில் பார்க்கும் திறமை பெற்று, இன்றைய ரோபாட்டைவிட ஆயிரம் மடங்கு அதிக தகவல்கள் சேகரித்து அலசும்.

எதிர்கால ரோபாட்டுகளின் சில முன்மாதிரிகள் இன்றே ஆராய்ச்சி சாலைகளில் கிடைக்கின்றன. வாக்குவம் க்ளீனர் பார்த்திருப்பீர்கள். ஆளுதவி இல்லாமல் தானே வீட்டைத் துப்புரவாக தூசுறிஞ்சி சுத்தமாக்கும் வாக்குவம் க்ளீனர்கள் இன்று சாத்தியம். அவற்றால் மாடிப்படி எது, சுவர் எது என்பதைக் கண்டுகொள்ளமுடியும். போகப்போக தன்னிடமுள்ள வரைபடத்தைப் புதுப்பித்துக்கொண்டு, விவரம் சேர்த்துக்கொள்ளும். சுவரில் போய் தானாகவே சார்ஜ் வாங்கிக் கொள்ளும்.

முதல் தலைமுறை முழு ரோபாட்டுகள் மனித வடிவில் இருக்கும். கை கால்கள் வைத்துக்கொண்டு நடக்கும். பல காரியங்கள் செய்யும். ஆனால், உங்களுக்கு நண்பனாக இருக்காது. அதன் மூளையை ஒரு பல்லியின் மூளைக்குச் சமமாகச் சொல்லலாம். சுமார் நூறு ஆணைகள் தெரிந்திருக்கும். ஃபாக்டரியில் வடிவமைத்ததைத் தவிர, புதிய காரியம் எதையும் அதனால் செய்யமுடியாது. புரியவில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு, ஓர் ஓரத்தில் போய் நின்றுகொள்ளும். அதைத் திட்டினால் தெரியாது. திட்டலாம்.

2030-க்குள் இரண்டாம் தலை முறை ரோபாட்டுகள் வந்துவிடும். பல்லியின் மூளையிலிருந்து எலியின் மூளைக்கு உயரும். உதாரணமாக, ஒரு பொருளைக் கையில் எடுக்குமுன், அதன் எடைக்கேற்ப ஒரு கை, இரண்டு கை... ஏன், மூன்று கைகளைக்கூடப் பயன்படுத்தும். போகப்போகக் கற்றுக்கொள்ளும் விதமாக‘ கண்டிஷனிங் மாட்யுல்ஸ்’ என்னும் நிரலின்படி நல்ல காரியங்கள், வேண்டாத காரியங்கள் என்றுவிருப்ப அளவை வைத்துக் கற்றுக் கொள்ளும். அதற்கு எஜமானனின் குரல் பரிச்சயம் உண்டு. அவர் சொல்லும் good, bad போன்ற வார்த்தைகளுக்கேற்ப ஒரு செயலைத் தொடரவோ, நிறுத்தவோ செய்யும். நீங்கள் தூங்கும் சமயத்தில் சப்தமெழுப்பாமலிருக்க அதற்குக் கற்றுக் கொடுக்கலாம்..

மூன்றாம் தலைமுறை ரோபாட், ஒரு குரங்கின் திறமையைக் கொண்டிருக்கும். நாம் செய்வதைப் பார்த்து அதுவும் செய்யும். 'மங்கி ஸீ மங்கி டூ!' உங்கள் வீட்டை முழுமையாக அறிந்திருக்கும். வெளியுலகைப்பற்றி அதற்குத் தெரியாது.

நான்காம் தலைமுறை ரோபாட்டுகள்தான் மனிதனுக்கு அருகே வரும். உதாரணமாக,ஒரு இங்க் பாட்டிலைக் கவிழ்த்தால், இங்க் கொட்டி தரை பாழாகிவிடும் என்பதை அறிந்திருக்கும். அதேபோல் பல எளிய திறமைகளை ஒத்திகை பார்த்துவிட்டுக் கற்றுக்கொள்ளும். இந்த நிலைமை வர 2040 வரை ஆகலாம்.

ரோபாட்டுகள் உங்கள் மகளைக் காதலிக்க, இன்னும் அரை நூற்றாண்டாவது ஆகும்.<<<<<<

சினிமா விரும்பி

No comments:

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...